Saturday, May 11, 2024

YOGA -12

 

இனிமை நிறைந்த உலகம் இருக்கு

இதிலே உனக்கு கவலை எதற்கு?

 

நீண்ட நேர இரயில் பயணங்களில், நாம் அனைவருமே குறுகிய கால நட்பு ஒன்றை அடைவோம், அவ்வகை நட்பில்  நடுவயதை தாண்டியவர்கள், ஒருவருக்கொருவர் சிறு புன்னகையுடன் தொடங்கி நேரடியாக மூன்று விசயத்தை வழிநெடுக, பயணம் முடியும்வரை  பேசிக்கொண்டே வருவதை கவனிக்க முடியும், தங்களை பற்றிய அறிமுகங்கள், சினிமா அல்லது அரசியல் , மற்றும் உடல் நலம்.

இப்படி ஒரு காட்சியை பயணங்களில் அடிக்கடி பார்த்திருப்போம்முறையே  45, 50,60 வயதை ஒட்டிய மூவர் பேசத்தொடங்குகின்றனர் , முதலாமவர்  தான் கொண்டு வந்த உணவை திறந்து உண்டபடியே மற்றவர்களிடம்,  ' சுகர் லெவல் பார்ட்டர்ல இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டார் , இப்பல்லாம் இயற்கை விவசாய உணவு தான் எடுத்துக்குறேன்சீனியை தொடவே மாட்டேன்வாட்டர் தெரபி , வேகன் டயட் , பேலியோ  உணவு திட்டம் , இது போக , சித்த மருத்துவ லேகியம் , கஷாயம் , குளிகை, பத்தியம், ன்னு, ஒருமணி நேரத்துக்கு ஒருமுறை எதையாவது ஒன்றை எடுத்துக்கறேன், அறுபது எழுபது வயசுல வரவேண்டியது இப்பவே வந்துடுமோன்னு கவலை, அதனால தான் ஒரு எச்சரிக்கை உணர்வு,’’ என்று பரிதாபம் கலந்த தொனியில் சிரிக்கநடுவயது தாண்டிய இரண்டாமவர் , ‘’எனக்கும் அதே பிரச்னை தான் சார் , இனிப்பு எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் ஆனால் ஆசைப்படி சாப்பிட்டு பத்து வருஷம் ஆச்சுஆனா இதுல ஒரு ஏமாற்று வேலை இருக்கு சார் , நான் வாட்சப்பில் படிச்சேன் , நவீன மருத்துவர்கள்  பணம் காசுக்காக இப்படி சுகருன்னு சொல்லி நம்மள எல்லாம் பயமுறுத்துறாங்க, நம்பாதீங்கன்னு  ஒரு ஹீலர் கூட சொன்னாரு,  அவரு சொல்றதெல்லாம் சரியாதான் இருக்கு , ஆகவே நான் மருந்து மாத்திரை சாப்பிடறத  போனவாரம் நிறுத்திட்டேன் , இனி வீட்லயே குணப்படுத்திக்க சொல்லி குறிப்புகள் இருக்கற ஒரு புக் குடுத்துருக்காரு , அத தொடர்ந்து செஞ்ச மூணு மாசத்துல சுகர் குறைஞ்சுடுமாம்’’. என்று  நவீன மருத்துவத்தின் குறைகளை பட்டியலிட ஆரம்பிப்பார்முதலாமவருக்கு அந்த குறிப்புகள் உள்ள புத்தகத்த பார்க்கவேண்டும் என மெல்லிய சபலம் தட்டியது. இப்போது  அறுபது வயது மனிதர்  ‘’நம்ம கதையே வேற சார், அம்பது வயசுல சுகரு கூடிப்போய், ஒரு  நாள் கண் பார்வை மங்கி ,மயக்கம் போட்டு விழுந்தேன்அன்றிலிருந்து இன்னைக்கு வரை இன்சுலின்ல தான் வண்டி ஓடுது, ஆனா நான் எதுக்கும் கவலை படுறதில்ல , டயட் கோக் , கருப்பட்டி காப்பி ,சுகர்ப்ரீ மைசூர் பாக்குன்னு, ஒரு அயிட்டமும் விடறதில்ல , எக்ஸ்ட்ராவா ஒரு ஊசியை தொடைல குத்திக்கிட்டு, வேண்டியதை தின்னுடுவேன், என்று சிரித்தார். இந்த மூவரின் பேச்சு ஆரோக்யமான ஒருவருக்கு ஒருவகையில் அசூயையை உண்டாக்கும்சுகர் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்து விடும் போல என்கிற பயத்தை உருவாக்கும் , ஆனால்  நாம் இது போல பொது வெளியில் பேசப்படுவதை கேட்டு , உடலும், மனதும் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது நம் தனிப்பட்ட நலனுக்கு நல்லது 

இது போன்ற ‘ரயில்பயண ஞானியரை’ ,’வாட்சப் விஞ்ஞானிகளை’ , ‘கூகிள் அறிஞர்களை’  கவனிப்பதற்கு பதிலாக இரண்டு விஷயங்களை கூர்ந்து நோக்கலாம் , ஒன்று நம்முடைய உடலும் உள்ளமும் மூளையும் இணைந்து புரியும் சமரச உரையாடல்.

இந்த உடல் தொடர்ந்து நம்முடன் பேசிக்கொண்டே தான் இருக்கிறது, அதற்கு தேவையெல்லாம் குறைந்த பட்ச ஒழுக்கம் எனும் வாழ்க்கை முறை, அந்தந்த வயதிற்கு தகுந்த உடல் உழைப்பு , நல்ல தூக்கம் , சரியான செரிமானம்அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது மருத்துவ துறையின்{ இந்திய / ஆங்கிலவல்லுநர்கள் சொல்லும் ஆதாரபூர்வமான கருத்துக்கள்.

நவீன மருத்துவம் தான் நம்மை சர்க்கரை நோய் பற்றி பயமுறுத்துகிறது,  என்று நினைக்க வேண்டாம் , நமது ஆயுர்வேதமும்  சர்க்கரை நோயை  'பிரமேஹம் மஹாரோஹம் '' என்கிறது.  அதாவது குணப்படுத்த முடியாத ஆபத்தான நோய்களில் ஒன்று என்கிறது. ஆகவே மருத்துவ துறையில் நடைபெறும் அன்றாட ஆய்வுகளையும் அவர்கள் சொல்வதையும் தான் நாம்  கேட்கவேண்டும். நம்முடைய ஒவ்வொரு உடலுறுப்புக்கும் ஒரு குறிப்பிட்ட வயது அல்லது காலம்வரை ஆரோக்யத்துடன் செயல்படும் திறன் இருக்கிறது , உதாரணமாக. மூட்டுப்பகுதி  65 வயது வரை ஆரோக்கியமாக இயங்க முடியும்,  ஆனால் மூட்டுப்பகுதியை சரியாக பயன்படுத்தாத ஒருவருக்கு அல்லது அதிகமாக பயன்படுத்திய ஒருவருக்கு  65வயதில் வரவேண்டிய மூட்டுவலி  45 வயதில் வருமென்பதில் ஒரு சந்தேகமுமில்லைஅதுபோலவே , நமது கணையம் இன்சுலினை சரியாக சுரக்க இருபது வயதில் தொடங்கி படிப்படியாக  மிக நல்ல ஆரோக்கியத்துடன் அறுபது வயதுவரை முழுமையாக செயல்படும் திறனுடையது , ஆனால்  மேலே சொன்ன உடற்பயிற்சி , உளச்சமநிலை ,ஆரோக்யமான உணவுக்கொள்கைஇவற்றை  சரியாக நிர்வகிக்க முடியாத ஒருவருக்கு நாற்பது வயதில் நீரிழிவு நோய் வருவதை தவிர்க்கவே முடியாது. என்கிறது நவீன அறிவியலும் , நமது பாரம்பரிய மருத்துவமும்.

 யோக மரபு இந்த மூன்று காரணிகளையும் கருத்தில் கொண்டே பெரும்பாலான பயிற்சிகளை வடிவமைத்துள்ளது. உடலுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் ஆசனப்பயிற்சிகள் , உளச்சமநிலைக்கு தியானப்பயிற்சிகள், உணவுசார் ஆரோக்கியத்திற்கு 'மித ஆகாரம் ' எனும் கருத்து என ஒரு பரந்துபட்ட பாடத்திட்டத்தை கொண்டுள்ளது. ஒரு யோகசாதகனுக்கு  இனிப்பு பண்டம் என்பது சத்வ குணத்தை மேம்படுத்தும் உணவாக , யோகபாடத்திட்டம் கருதுவதால் , எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் அதை செரிமானம் செய்து ஆற்றலாக மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு சரியான பயிற்சி திட்டத்தை மேற்கொள்ளுங்கள், இனிப்பு  என்பது தவிர்க்கப்பட வேண்டிய , பயப்பட வேண்டிய ஒன்றல்ல. இனிமை நிறைந்த ஒன்றில் வாழ்நாளெல்லாம் திளைக்க ஒருவர் அச்சப்படவோ , குற்ற உணர்வு கொள்ளவோ தேவையில்லை , சாதனா மார்க்கம் ஒருவரை அனைத்திற்கும் தயாராக்கும், இனிமை நிறைந்த உலகுக்கும் தான்.

ஒன்றுடன் வாழ்நாள் முழுவதும் போராடிக்கொண்டே இருப்பதை விட , அதை ஆளும் ஒன்றை ஆற்றல் மிக்க ஒன்றாக மாற்றுவதையே யோகமுறைமை முன் வைக்கிறது , இன்சுலின் சுரக்கவில்லையே என போராடிக்கொண்டிருப்பதை விட , கணையத்தை வலுப்பெற செய்யக்கூடிய ஒரு பயிற்சி திட்டத்தை மரபு வழி யோகம் மூன்று மாத திட்டம் ஒன்றை வைத்திருக்கிறது

Featured Post

YOGA -12

  இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதற்கு ?   நீண்ட நேர இரயில் பயணங்களில் , நாம் அனைவருமே குறுகிய கால நட்பு ஒன்ற...