Wednesday, October 19, 2022


                                                     வேள்வியை காணுதல்


முன்பு ஒருமுறை எங்கள் குருகுலத்தில்,  என் ஆசிரியர் ஸ்வாமி நிரஞ்சன், ஒரு கலந்துரையாடலில், பஞ்சமஹா யக்ஞம்,  பற்றி விவரித்துக்கொண்டிருந்தார்.
அதில் மூன்றாவது வேள்வியாகிய, "ப்ரம்ம யக்ஞம்" பற்றி பேசுகையில், 
உலகம் முழுவதிலும் ஞானம் சார்ந்த தேடல் உள்ளோர், ஞான வேள்வியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டோர், எந்த பலனும் கருதாமல், முழுமூச்சாக, அதையே வாழ்க்கை என அமைத்துக்கொண்டு, எங்கேனும் ஒரு இடத்தில் அமர்ந்து அந்த தவத்தில் இருப்பார்கள். சற்று சிரத்தையுடன் தேடினால், நம் ஊருக்கு மிக அருகிலேயே அப்படி ஒருவர் இருக்க வாய்ப்புண்டு. நாம் தான் தீவிரமாக தேடுவதில்லை. உங்கள்
 ஊரில் கூட  "திராவிடாச்சார்யார்" என்கிற ஸ்வாமிஜி இருக்கிறர்
 தெரியுமா? என எங்களை கேட்க.  எங்களுக்கு அப்படி ஒருவரை தெரிந்திருக்கவில்லை.

ஆனால் அந்த பெயர் நீண்ட நாட்கள் என் நினைவில் நின்று விட்டது, பின்னர் ஏதோ ஒரு தருணத்தில், அவரை
 இணையத்தில் கண்டடைந்தேன்,  ஒவ்வொரு நாளும் அவருடைய எதேனும் ஒரு உரை அல்லது ஒரு வேத பாடத்தை கேட்பதை என் பழக்கமென கொண்டேன்.

பின்னர் எனது தூர்தர்ஷன் நிகழ்ச்சிக்கும், ஆசிரிய பயிற்சி திட்டத்திற்கும், அவருடைய உரைகளும், அவர் தொகுத்து வெளியிட்டிருக்கும், முக்கியமான நூல்களுக்கான விளக்க உரைகளும், மேலும் மேலுமென என்னை உள்ளே இழுத்துக்கொண்டது.

நேரில் சந்திக்க வேண்டுமென ஆர்வத்தில் அவரை கடிதம் மூலம் தொடர்பு கொண்டு, ஒரு நாள் கிளம்பி சென்றேன்.

"வா.....வா.....உனக்குத்தான் காத்துக்கொண்டு இருந்தேன்" என ஒருமையில், நட்புடன் உள்ளே அழைத்துச்சென்றார்.
அதன்பின், அனைத்து உரையாடலிலும்,ஒரு மாணவனென, நேரடியாக சென்று அவர் இருக்கைக்கு அருகே தரையில் அமர்ந்து கொள்வேன். அவர் பேசுவார். நான் என் துறை சார்ந்த பல நூல்களை அவர் சொல்லித்தான் கேள்வியே படுகிறேன். 

ஸ்வாமி திராவிடாச்சார்யார் தன்னை, 
தக்ஷிணாமூர்த்தி, ஆதிசங்கரர்
, வித்யாரண்யர், ஸ்வாமிசாந்தி  தர்மானந்த சரஸ்வதி, மற்றும் ஸ்ரீ சர்வேஷானந்த சரஸ்வதி, என்கிற குருமரபின் நீட்சியாக முன் வைக்கிறார்.

அதே வேளையில், குரு-சிஷ்ய முறையில்,  சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், மீமாம்சை, காஷ்மீர சைவம்,  என அனைத்தும
 கசடற கற்று தேர்ந்து, ரிஷிகேஷத்தில் 30வருட வாழ்வை நிறைவு செய்துவிட்டு,
திருவண்ணாமலை அருகில் தீர்த்தமலை எனும் அழகிய மலை அடிவாரத்தில் , தனியாக குடில் அமைத்து, தனிமைத்தவத்தில், இந்த ஞான வேள்வியை நடத்தி வருகிறார்.

வகுப்புகள் நடத்துவதில் நாட்டமில்லை , எனினும், தன் குருவின் ஆணைக்கிணங்க, தொடர்ந்து, பல்வேறு
 நூல்களை, அதிகமும் புழக்கத்தில் இல்லாத, வேத,வேதாந்த, நூல்களை, சம்ஹிதைகளை, குறித்து தினமும், இணையத்தில் உரையாடி வருகிறார்.

அது போக, பல்வேறு அரியவகை நூல்களுக்கு உரை எழுதியும், அச்சுவடிவத்திலும், தன்னை காண வருபவர்களுக்கு வழங்குகிறார்.

முதல்முறை
 சென்ற போது ஸ்ரீ வித்யாரன் யர் எழுதிய " பஞ்சதசி" நூலினையும், என் துறை சார்ந்த சில நூல்களையும் பரிசாக தந்தார்.

அடுத்த முறை ஒரு சிறிய நண்பர்கள் குழுவுடன் சென்றோம்.  அடைமழையில் கூரையின் இரைச்சலுடன், ஒரு நீண்ட கலந்துரையாடல் நிகழ்ந்தது.  அதில் ஓவ்வொருவரையும் பார்த்து, அவரவர்க்கான, நூல்களையும், அடைய வேண்டிய கல்வியையும், தொடர்ந்து பரிந்துரை செய்தார். நண்பர்
சுபஸ்ரீ,  வேத, வேதாந்த கல்விக்கான அடிப்படை பாடத்தை எங்கிருந்து தொடங்குவது? என்கிற கேள்விக்கு, " சாதனா பஞ்சகம்" என்கிற உரையை படித்து/ கேட்டு விட்டு வா. மேற்கொண்டு உரையாடலாம். என உரிமையுடன், சொல்லி அனுப்பினார்.
இப்படியாக, வேத வேதாந்த நூல்கள்
 சார்ந்த, ஞானத்திலும்,  செயலின் முடிவு பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலும், நம் கண்முன் ஒருவர்,  ஒரு மலையடிவாரத்தில
 அமர்ந்து, தனிமைத்தவமும், தனது வேள்வியும் என வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்பது நமக்கு ஒரு மாபெரும் உந்துதல். நாம் நின்று கொண்டிருக்கும் இடம் என்ன? என்கிற தெளிவை, சென்று கொண்டே இருக்க வேண்டிய பாதை எது? என்கிற முனைப்பையும்,  நம்முள் விதைக்கிறது.


அப்படி ஒருவருடன் உரையாட விரும்பும் நண்பர்களுக்கு இது உதவலாம். என்று
 தோன்றியது. 

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடியவர்.
 முதலில் அவருடைய காணொளிகள்  சிலவற்றை காணலாம். பின்னர், மெயிலில் தொடர்பு கொண்டால், பதிலளிப்பார்.


கண்முன் நிகழும், ஞானவேள்வி ஒன்றை
 காணும் வாய்ப்பு பெற்றேன்.
அது தேடுவோர் அனைவருக்கும் சென்று சேரட்டும்.


















அன்பும், நன்றியும்

Friday, March 11, 2022

சுடலைப்பொடியின் பசுந்தழை நறுமணம் - அகரமுதல்வனின் மாபெரும் தாய் நூல் குறித்து

 



வரலாற்றுச் சோகங்களை  வாதைகளை   போர்சூழலை காவியங்களில் வடிப்பதும், அத்தகைய  வேதனைமிகு சூழலை  வாசிக்கும் ஒருவருக்கு கடத்துவதும் தான்,  ஒரு படைப்பு செய்யக்கூடிய காரியம் எனில், ஒருவர் ஏன் இவ்வகை சோகத்தை தேடிச்சென்று படிக்க வேண்டும்?  தன் வாழ்விலேயே இருந்து கூட  பெற்றுக்கொள்ள முடியமே. அன்றாட வாழ்வில் சோகத்திற்கா பஞ்சம் ?


அல்லது அப்படி போர்சூழலை அதன் வஞ்சக தீமைகளை எழுதுவதால், வரும் காலங்களில் மனிதர்கள், முடிந்து போன வரலாற்றிலிருந்து தமக்கான பாடங்களை கற்றுக்கொண்டு  போர் செய்யாமல்  இனிமையான வாழ்வை வாழ்வார்கள். என்று அர்த்தமா ? 

இந்த இரண்டு வினாக்கள் தான்  நாம் இதுவரை படித்த ஈழ எழுத்துக்கள் நமக்கு கடத்துபவை. 

இலக்கியம் ஆன்மீகத்திற்கு இணையானதெனில், நம் அகம் சென்று தொடக்கூடிய கூர்முனை உள்ள கருவியெனில், மேலே கேட்ட கேள்விகளிலிருந்து முன்னகர்ந்து  புதிய வெளிச்சம் ஒன்றை தரவேண்டும்.  
 
அப்படி ஒரு வெளிச்சத்தை இன்றைய தலைமுறை ஈழப் படைப்புகளில் காண முடிகிறது. போர்சூழல் முடிந்து இடம்பெயர்வும் நடந்து,  வெவ்வேறு திசைகளிலிருந்து எழுதிக்கொண்டிருப்பவர்களில், அகரமுதல்வன் முக்கியமானவர். என அவருடைய  'மாபெரும் தாய்'  நூல்  நம்பிக்கை விதைக்கிறது. 

அகரமுதல்வன் கவிஞராகவும் அறியப்படடவர் என்பதால் இந்நூல் ஒரு கவித்துவ நடையுடன், ஒப்பாரிகளையும் , மரண ஓலத்தையும் கூட , சரியான சொற்களில் கடத்திவிட முடிகிறது. பன்னிரண்டு கதைகள் கொண்ட இத்தொகுப்பில்,
நேரடியாக போர்க்கள சூழலை கண்டவர். 
நேரடியாக பாதிக்கப்பட்டவர்.
நேரடியாக  மீண்டு வந்தவர். 
எனும் சித்திரம் கதைகள் முழுக்க நிறைகிறது . 

அதற்கு இணையாகவே , படிமங்களும் உருவகங்களும்  ஒவ்வொரு கதையிலும் மிளிர்கிறது. 
''நிலமெங்கும் ஓடிய குருதி வெள்ளத்தில் நந்தி விக்கிரகங்கள் மூழ்கின, நாகமும் மீன்களும் பொறித்த  நாணயங்கள் வீதியெங்கும்  கேட்பாரற்று கிடந்தன. 
எஞ்சிய நந்தி விக்கிரகங்களை  புத்த பிட்சுக்கள் உடைத்து நொறுக்கினர். அந்த குருதியின் ஈரப்பதத்தின் மீது வெள்ளரசுக் கன்றுகளை நடத்தனர். தமது கொலைவாள்களை புத்தனின் சிலைகளில் மறைத்து வைத்தனர்-
 எனும் வரிகள் வெறும் போர்சூழலையும், மரணங்களையும் காட்சிப்படுத்துவதை தாண்டி மற்றவர்கள் நம்பிக்கைகளை உடைப்பதையும் போர் என்றே கருத வேண்டிய சித்திரத்தை அளிக்கிறது.

எந்த போரிலும் முதலில் நிகழ்வது  சூறையாடல், அதை தொடர்ந்து கற்பழிப்பு, இவையிரண்டையும் உலகம் முழுவதும் எழுதி எழுதி இன்னும் தீரவில்லை, இந்த நூலிலும் அவை கிட்டத்தட்ட அனைத்து கதைகளிலும் இடம்பெறுகிறது. ஆச்சரியமாக, அந்த இழப்புகளுக்கு பின்னரான வாழ்வும் ஒரு சிறு ஒளிக்கீற்றும் இருப்பதை இந்த கதைகளால் மிக ஆத்மார்த்தமாக சொல்ல முடிந்திருக்கிறது.  

நம்பிக்கை தரும் இளைய படைப்பாளி எனும் இடத்தை நாம் இதை வைத்தே முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. 

பாரதப்போரின் 18 நாள் மகா யுத்தத்தை விட, அதற்கு பின்னர்  கட்டியெழுப்பப்பட்ட  அஸ்தினாபுரம் அல்லவா  இன்னும் ஆழமாக பதிவு செய்யப்படவேண்டும்.  கலையும் இலக்கியமும் நமது அக-புற வாழ்வியலில் நம்பிக்கை விதைக்கும் என்றால்  ஒரு தேர்ந்த படைப்பாளி, இந்த வெளிச்சத்தை ஏற்றக்கூடிய திரியை அல்லவா தேடித்தேடி பற்றவைப்பான்.  

போர்சூழலின் போது, இராணுவ துரோகிகளாகவும், தேசத்துரோகிகளாகவும் , இயக்க துரோகிகளாகவும் இருந்தவர்கள்  அனைவரும், உயிரை மட்டும் உடமையாக்கிக்கொண்டு, கிடைத்த நாடுகளில் கிடைத்த,  கிடைத்த வேலையில்  தஞ்சம் புகுகின்றனர். முன்னால் எதிரிகளும் , துரோகிகளும், இன்று குட்டி யாழ்ப்பாணம் என்று சொல்லக்கூடிய சென்னை வளசரவாக்கம் பகுதியில் நண்பர்களாக , காதலர்களாக, புதிய உறவுகளின் மூலம் குழந்தையும் குட்டியுமாக  வலம் வருகின்றனர். 

பெரும்பாலான கதைகளில், நீண்ட நாட்களுக்கு பின்னர் சந்தித்துக்கொள்ளும் ஆணும் பெண்ணும்  சில மணித்துளிகளில் நிர்வாணமாக கட்டிலில் கிடக்கின்றனர். முதலில் ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும் இந்த காட்சிகள், ஒட்டுமொத்தமாக நூலை முடிக்கையில், உயிரை கையில் பிடித்துக்கொண்டு சிதறி ஓடியவர்கள்  ,காமத்தையும் அதே அளவில் ஆழத்தில் பிடித்துக்கொண்டு தான் ஓடியிருக்க முடியும், கனிந்து அமையும் தனிமையும், சிறு சுதந்திரமும், அப்படித்தான் வெளிப்படமுடியும் என்றே தோன்றுகிறது.  ஆதி இச்சை எனும் உயிரின் இருப்பு.

தொன்மம் மற்றும் , மரபின் மீதான பரிச்சயமும், சைவ நூல்களின் ஆழ்ந்த வாசிப்பும் கொண்ட அகரமுதல்வனுக்கு, இந்த கதைகளை சொல்வதில் ஒரு  ஆச்சியின் கதை கூறல் தன்மையை கொடுத்து விடுகிறது, ஆகவே நாம் மகவு என மடியமர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கலாம். 
பிலாக்கணம் பூக்கும் தாழி - எனும் கதையில்  முதுமை கனிந்து இறக்கும் தருவாயிலுள்ள ஆச்சிக்கும், மருமகளுக்குமான கிண்டலும் , சீண்டலுமான ஒரு அந்நியோன்யமான உறவை பற்றி சொல்கையிலும் , 
மாபெரும் தாய் கதையில், முன்னோர்களின் தெய்வங்கள் அனைத்தும் உயிர்ப்புடன் எழுந்து வந்து நடமாடுகிற, இடங்களிலும், மரபும், தொன்மமும் இல்லையென்றால். இக்கதைகள் அனைத்தையும், ரத்தமும், கருமையும் , தாமசமும்  கொண்ட கதைகளாக மாற்றி இவற்றின் ஆன்மாவை அழித்திருக்கும். 




அங்கையற்கண்ணியும் , வீரபத்திரனும் , பத்ர காளியும் கதைகளினூடே எழுந்து வந்து, ''இனி வாழ்ந்து நிறைக மக்களே'' எனும் குரலை துல்லியமாக கேட்க முடிகிறது.

 போர்ச்சுழலை நேரடியாக எதிர்கொண்டவர், எனினும்  ரணங்கள் அனைத்தையும்  நம்பிக்கை எனும் மை தோய்த்து எழுதி எழுதி பார்க்கிறார். அதற்கு மரபும் , தொன்மமும்  துணை நிற்கிறது.  

அங்கே சுடலை காடாகிப்போன பூமியிலிருந்து கூட மழைக்கு பின்னான பசுந்தழை முளைக்கிறது.நறுமணம் பரப்புகிறது.

காடுடைய சுடலைப் பொடி பூசியவன் தான் பொன்னார் மேனியனாகவும் இருக்கிறான் என்கிற நம் மரபின்  வசீகரத்தை கச்சிதமாக கையாண்ட விதத்தில்  அகர முதல்வனுக்கு அன்பும்  வாழ்த்துக்களும்.

Friday, February 18, 2022

நிமித்திகனின் தேர்ந்த சொற்கள் - யுவால் ஹராரியை முன்வைத்து

 



எந்த ஒரு திருவிழாவிலும், அதன் உற்சாகத்திற்கு மத்தியில் சிலரை நாம் நிச்சயம் காணவேண்டியிருக்கும், ஒரு குழந்தைக்கு பஞ்சுமிட்டாய்காரனும் ,  பலூன்காரனும் போல. பெரியவர்களை குறிவைத்து திருவிழா தோறும் செல்பவர்கள்,  நிமித்திகர்கள். கிளிஜோசியம் , கைரேகை , எலிஜோசியம், சோளி உருட்டி ஜாதகம் கணிப்பவர், குடுகுடுப்பைக்காரர்.  என, அது ஒரு முக்கியமான  குழு. 

 தம் வாழ்க்கை பற்றி ஏற்கனவே தெரிந்தவற்றையோ,  அல்லது உண்மை என நம்பாவிட்டாலும் வருங்காலத்தை பற்றியோ ,  அல்லது நடப்பு சிக்கலுக்கான பரிகாரம் என, எதோ வடிவில் மனிதர்களுக்கு நிமித்திகர்கள்  சொல்லால் கேட்பதில் அலாதி விருப்பம் இருக்கவே செய்கிறது.

அப்படியான நிமித்திகர்களில், வரலாறு ,அறிவியல் ,
அரசியல், தொன்
மம் , மானுடவியல். என அனைத்தையும் அறிந்த ஒரு அறிஞர், இந்த மானுடகுலம் முழுவதையும்,கணித்து,  தன் சொற்களால் கோர்த்து சொல்ல முடிந்தால் எப்படி இருக்கும்? என்பதற்கு பதில் தான்  யுவால் நோவா ஹராரி. 

அவர் குறிக்களம் வரைந்து,  மிக நேர்த்தியாக சோளிகளை உருட்டி,  முக்காலத்தையும் தன் சொற்களால் திரட்டி அளித்தது தான்  அவருடைய மூன்று நூல்கள். 'யுவால் ட்ரியாலஜி'  எனலாம். 

சேப்பியன்ஸ் எனும் அவருடைய முதல் நூல்  மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு என. கடந்த எண்பதாயிரம் ஆண்டுகால பரிணாம வளர்ச்சியை , மற்ற மிருகங்களைவிட வலிமை குன்றிய ஒரு குரங்கினம் எப்படி தன்,  ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் பரிமாற்ற சக்தியால்,  வல்லமை மிக்க மிருகங்கள், முதல் பூகோளம் முழுவதையும், தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.  என்கிற மாயத்தை ஊகங்களும் ,தரவுகளும், வரலாற்று படிமங்களையும், வைத்து பின்னி எழுதப்பட்டு,  உலகம் முழுவதும் கவனம்பெற்ற நூலானது .

இவருடைய இரண்டாவது புத்தகமான  ''ஹோமோ டியஸ்''  மனித வாழ்வின் வருங்காலத்தை ஆய்வு செய்கிறது. ஹோமோ சேப்பியன்ஸ் எனும் இந்த இனம்  இறுதியில் எப்படி கடவுளராக ஆவர். அறிவு மற்றும் அகவிழிப்புணர்வின் உச்சக்கட்டம் என்னவாக இருக்கும் ? தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிர்தொழில் நுட்பத்தின் சங்கமம் அதன் சாத்தியக்கூறுகள் போன்றவற்றை விரிவாக அலசியிருப்பார் .

முந்தைய இரண்டு புத்தகங்களும் பெரும்கவனத்தையும், வெற்றியையும் பெற்றுவிட்டதால் , இந்த கட்டுரையில் நாம் அவருடைய மூன்றாவது வெற்றிப்படைப்பான '' 21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் '' என்கிற புத்தகத்தை அறிந்துகொள்ள முயற்சிக்கலாம் .

பெயர்தான் அப்படி இருக்கிறதே தவிர , இதில் எந்தவித கறார் பாடத்திட்டமோ , மேடை முழக்கங்களோ அன்றி, மிக இயல்பாக உள்ளது உள்ளபடி என்கிற ஒரு காலக்கண்ணாடியென நிகழ்காலம் குறித்து விளக்குகிறார் .   நிகழ்காலம் என யுவால் உத்தேசிப்பது  2018 முதல் இன்னும் ஒரு முப்பது , நாற்பது வருடங்கள் என தோராயமாக நாம் கணக்கு வைத்துக்கொள்ளலாம் . அப்படியான உலக சம்பவங்களையும், மனிதர்களையும் தான்  முன்வைக்கிறார்  என்பதால் .

யுவால் இந்த நூலின் வழியாக நம்மிடம் பேசுகையில் மூன்று குரல்கள்  ஒலிக்கிறது. ''உலக அரசியல் , சமகால வரலாறு, தொழில்நுட்ப அசுரவளர்ச்சி, வர்த்தகப்போர்கள்,  என நம்மால் கற்பனை செய்து பார்ப்பதற்கோ, அந்த மாபெரும் நிகழ்வின் மீது ஒரு துளி கூட கட்டுப்பாடு கொள்வதற்கோ, எந்த சாத்தியமும் இல்லாத, வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்கிற கையறுநிலை கொண்டவர்கள் நாம் அனைவரும்''- என சொல்லும் முதல் குரல்.

இரண்டாவது குரல் இன்னும் சற்று ரகசியமாக ஒளிக்கக்கூடிய, தாராளவாதமும் , கட்டற்ற நுகர்வு வெறியும், டிஜிட்டல் சர்வாதிகாரமும், மும்முனை தாக்குதலை நமக்கு தெரிந்தோ தெரியாமலோ, நம் ஒவ்வொரு அசைவிலும் ஊடுருவி நடத்திக்கொண்டு இருக்கும் பொழுது, இதிலிருந்து தப்பிக்க இயலாவிட்டாலும், சமநிலை தவறாத, சற்றேனும் அறிவார்ந்த, பாதிக்கப்படாத மனிதனாக இருப்பதற்கான சில வழிமுறைகளை சொல்லும் குரல்.

மூன்றாவது குரல், நம்மால் கட்டுப்படுத்தக்கூடிய சாத்தியங்கள் உள்ள , மனம் உணர்வுகள் ,நம்பிக்கைகள் , சார்ந்த நேர்நிலை வாழ்விற்கு மரபின் தொடர்ச்சியிலோ, அறிவியலின்  துணை கொண்டோ அவற்றை அடைவதற்கான வழி .

உலக தாராளவாதமும் , செயற்கை நுண்ணறியும், இயந்திர கற்றல் எனும் ஆட்டொமேஷன், எல்லாம்  இணைந்து, நூறு பேர்   செய்யக்கூடிய வேலையை ஒரு இயந்திரம் செய்துவிடும் என்கிற பட்சத்தில்,  2050ல்  வேலைவாய்ப்பு சந்தை எப்படி இருக்கும் என்கிற கேள்வியை எழுப்பிவிட்டு, ஒற்றை பதிலை முன்வைக்காமல் ,  வரலாற்று நிகழ்விலிருந்து சில மேற்கோள்களை காட்டுவதன் மூலம், ஒரு தெளிவை உண்டாக்குகிறார். 

19ம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆலைத்தொழிலாளர்களின் ஒரு ரகசிய அமைப்பு,  ஆலைகளில் இயந்திரங்களை பயன்படுத்துவதை எதிர்த்து போராடிய ஒரு புரட்சி குழுவினர் .  அவர்கள் தங்களுடைய வேலையை இயந்திரம் எடுத்துக்கொண்டால், தங்கள் தொழிலை கற்பதற்கு தாங்கள் செலவிட்ட நேரம் வீணாகும் என பயந்தனர் .   இங்கிலாந்து நாட்டிங்காம் நகரில் தொடங்கி நாடு முழுவதும் பரவி  1811 முதல் 1816 நீடித்தது.  இறுதியில் சட்டத்தைக்கொண்டும் , இராணுவத்தைக்கொண்டும்  அந்த புரட்சி அடக்கப்பட்டது.  எனினும் ஆலை இயந்திரங்கள் அடுத்த 10 ஆண்டுகளில்,  சராசரி வாழ்க்கை தரம் உயருமளவுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியபடி இருந்தது. இதுவே  உலகம் முழுவதும் நிகழ்ந்தது. 

எனில் 2050ல் நடக்கப்போகும் மாற்றமும் இப்படித்தான் அமையுமா எனில், 
மனித அறிவையும் , உணர்வுபூர்வமான, நரம்பியல் மற்றும் நடத்தை சார் விதிகளையும் இணைத்து பார்க்கவேண்டும் என்றும் ,  மொத்த மனித தொகையும்  இரண்டாக பகுக்கப்படும்.  ஒருசாரார் காலத்திற்கு பொருத்தமான மனிதர் என்றும் பெரும்பான்மையானோர் 'உதவாக்கரை ' என்றும்  பிரிக்கப்படும். 

ஒருபக்கம் செயற்கை நுண்ணறிவு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்க ,  வேலைவாய்ப்பு சந்தையிலிருந்து, லட்சக்கணக்கில் மனிதர்கள் வெளியே தள்ளப்பட்டு ''உதவாக்கரை '' எனும் நிலைக்கு வந்து சேர்வர்.  எனினும் இந்த உதவாக்கரை சமூகம் உருவாவதற்கு  போதிய கல்வியறிவோ , வேலை பற்றாக்குறையோ காரணமாக இருக்காது, மாறாக தனிமனிதரின்  'போதிய மனத்திண்மை ' இல்லாததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

பெருந்தரவுகளும்,  படிமுறை தீர்வுகளும்,  எப்படி நம்மை உற்று நோக்கிக்கொண்டு இருக்கின்றன , சாதாரண மனிதர்களாகிய நம்மை உற்று நோக்குவதால், அவை எதிர்காலத்தில் அடையக்கூடிய பலன்கள், லாபங்கள் என்ன என்கிற பட்டியல். சற்று சுவாரஷ்யமும், திகைப்பும், கொடுக்கக்கூடியது.
 
இப்படி நம்மை உற்று நோக்கும் அறிவியல், நமக்கான சுய தேர்வு என்பதை நாளடைவில் இல்லாமல் செய்துவிடும் , ''என் இஷ்டம் போல் வாழ்கிறேன்'' என நாம் வெளியே சொல்லிக்கொண்டாலும்  நம் 'இஷ்டம் ' என்பது எப்படி உலகின் ஒருசில கைகளால் தீர்மானிக்கப்படுகிறது. என்பதற்கு பல்வேறு தரவுகளையும் , நம்முடைய அன்றாட உதாரணங்களையும் முன்வைக்கிறது. சுதந்திரம் எனும் அத்யாயம்.  

இந்த கட்டுரை வலையேற்றப்படும் நாளில், படிப்பவருக்கும், பகிர்பவருக்குமான மாபெரும் வலைப்பின்னல் எங்கோ, வேகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கும்.  அந்த பின்னல்,  யுவாலின் 5வது புத்தகம் வெளியாகும்போது,  உங்களுக்கு பிரத்யேக சலுகை விலையில் கிடைக்க வழிவகை செய்யும்.  அல்லது  500ரூபாய் பாதிப்புள்ள உண்மையான பதிப்பு உங்களுக்கு வெறும் 100 ரூபாய்க்கு போலியான புத்தகம் அச்சிடப்பட்டு வீடு வந்து சேரும்.  அந்த போலி  புத்தகத்தில் யுவாலின் ஒரு சொல் கூட மாறியிருக்காது .  எனினும் யுவால் எப்படியோ சுரண்டப்பட்டிருப்பார்.  ஏனெனில் சந்தையை தீர்மானிப்பவர் நீங்களும், நானும், தான்.  அப்படியிருக்க நாம் எதற்காக யுவாலை பற்றி கவலை கொள்ளவேண்டும் ?  இந்த மனநிலை தான் நுகர்வுவெறி கலாச்சாரத்தின் அடிப்படை சாரமாக அமையும்.  அதை உலகம் முழுமையும்  ஏற்றுக்கொள்ளும் கொண்டாடும்.
என்பதையும் தத்துவவியலாளர்களுக்கு  சில புதிய வேலை வாய்ப்புகள் உருவாகக்கூடும் . என்றும் ஏற்கனவே வேலைவாய்ப்பு சந்தையில் மதிப்பிழந்து போயுள்ள அவர்களுடைய திறமைக்கு பெரும் கிராக்கி உருவாகும்.  என்றும், 
எதிர்காலத்தில் ஒரு நல்ல வேலைக்கான உத்திரவாதத்தை கொடுக்கக்கூடிய ஏதோ ஒரு படிப்பை  நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினால், ''தத்துவம் ஒரு நல்ல யோசனையாக இருக்கும்'' என்றும்  , தெளிவாக கூறுகிறார் . 

இதே யுவால் தான்,  தன்னுடைய நூற்றுக்கணக்கான காணொளிகளில், இப்போது பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருக்கும் குழந்தைக்கு,  எந்த படிப்பு நல்ல வேலைவாய்ப்பை உருவாக்கும்? என்று கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு இதுவரை தனக்கு எந்த தெளிவும் இல்லை.  என்று சொல்லிவந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது . 

அதே வேளையில்,  படிமுறைத்தீர்வும்( Algorithm }  இதுவரை பல்வேறு தவறுகளை செய்துள்ளதையும், அந்த தவறுகளால், சம்பந்தமே இல்லாத ஏதேனும் ஒரு அப்பாவி பாதிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.

உதாரணமாக, 2017ல்   பாலஸ்தீன தொழிலாளி ஒருவர் தனது பணியிடத்தில்,  ஒரு பீரங்கி ஊர்திக்கு அருகில் நின்று,  புகைப்படம் எடுத்து முகநூலில்  "காலை வணக்கம்" என்று அரபுமொழியில் { சபாச்சம் }எழுதி  பதிகிறார்.  அதை  படிமுறைத்தீர்வு  " அவர்களை கொல்லுங்கள்"{ டபாச்சம் }  என்று மொழிபெயர்க்கிறது.  அன்று மதியமே  அவர் கைது செய்யப்பட்டு , விசாரணையில்  கணினியின் தவறு. என  தெரிந்து, விடுதலை செய்யப்படுகிறார்.  இது ஒரு  சிறிய  உதாரணம்  தான்,  நமக்கே கூட அடிக்கடி நிகழக்கூடிய,   பணவரிவர்தனையின் போது 160ரூபாய் கொடுக்கவேண்டிய இடத்தில், நீட்டிய போனுடன் நின்றுகொண்டு இருப்போம், வங்கியின் வலைத்தளமோ சுற்றிக்கொண்டே இருக்கும்.  வேறு வழியில்லாமல் நாம் கையிலிருந்து பணத்தை கொடுத்துவிட்டு நகர,  அரைமணி நேரம் கழித்து உங்கள் கணக்கில்  160 ரூபாய் செலவு செய்யப்பட்டதாக குறுந்செய்தி வரும்.

செயற்கை நுண்ணறிவு பற்றி பேசுகையில், 
செயற்கை அமைப்பு முறைகளில்,  பிரக்ஞயை உருவாக்குவது ஒருபோதும்  அல்லது அடுத்த 10,20 ஆண்டுகளுக்காவது சாத்தியமனதில்லை, ஏனெனில் பிரக்ஞை,  உயிர் வேதியல், உயர் அறிவுத்தளம்  எனும் பல இயற்கை சார்புகளுடன்  பிணைக்கப்பட்டுள்ளது. என்று கூறிவிட்டு  அதை மெய்ப்பிக்க, காணும் கனவாகத்தான் ஹாலிவுட் திரைப்படங்களில், ரோபாட்டுக்கு பிரக்ஞை  உருவாவதும், கதாநாயகன் அந்த ரோபாட் மீது காதல் வயப்படுவதும் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தி பார்க்கின்றன  என்கிறார் .  இந்த செயற்கை நுண்ணறிவு  2100ல்  உயிர்ப்பொறியியல் துறையுடன் இணைந்து படைப்பாற்றல், ஆரோக்யம் ,அழகு நிறைந்த மனிதர்களை உருவாக்கும் வல்லமை பெற்ற தொழில்நுட்பமாக வளரும் பட்சத்தில் , உலகின் 1சதவிகித பெரும் பணக்காரர்கள், இவற்றை அனுபவிப்பார்கள், சைபீரிய கிராமவாசியின் ஒரு குழந்தையை விட சிலிக்கான் பள்ளத்தாக்கு தொழிலதிபரின் பேரக்குழந்தைகள் மேம்பட்ட ஒரு மனிதஇனமாக உருவாகும் சாத்தியமும் இருப்பதை  சுட்டிக்காட்டுகிறார்.

இணையவழி தொடர்புகளில் மகிழ்ந்து, லைக் போட்டுக்கொண்டிருக்கும், இந்த சராசரி ஹோமோ சேப்பியன்ஸ் இனம் , 150 மனிதர்களுக்கு மேல்  அறிந்து கொள்வதற்கான திறன் இல்லாதது, ஆகவே நமது 'நண்பர்கள் 'லிஸ்ட்டில் இருக்கும் 10 சதவிகித நபர்கள் பற்றி கூட நமக்கு அக்கறையோ,  அறிதலோ ,புரிதலோ எதுவும் இருப்பதில்லை.  மின்னணு இயந்திரங்களுக்கும் , இயற்கையான உடல்களுக்கும், இடையேயான எல்லையை அழித்து,  நம்முடைய தோலுக்கு அடியில் நுழைவதை, இலக்காக கொண்டுள்ள, தொழிநுட்ப ஜாம்பவான்கள், நம் உடல்களை புரிந்துகொண்டு,   நம்மை கையாள கற்றுக்கொண்டவுடன்,  நம்முடைய கைகளையும் , கண்களையும், கடனட்டைகளையும், தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இணையவழி தொடர்பும் , தொடர்பின்மையும்  தனித்தனியாக இருந்த பொற்காலம் வராதா?  என நாம் ஏங்கவும் கூடும்.

இவற்றை முன்வைக்கும் யுவால்  தீர்மானமாக ஒற்றை முடிவை எங்குமே சொல்வதில்லை அதுகுறித்து தனக்கு எந்த தெளிவும் இல்லை  என்பதை  பல இடங்களில் ஒத்துக்கொண்டு  மேலே செல்கிறார் .

இந்த நூற்றாண்டில் தான்,  நோயாளிகளை குணப்படுத்தும் வேலை,  பூசாரிகளின் கைகளிலிருந்து, அறுவைசிகிச்சை  மற்றும் உளவியலாளர்கள் கைகளுக்கு வந்துள்ளது.  கடந்த நூற்றாண்டு வரை ,  நீங்கள் எத்தியோப்பியாவில் வாழ்ந்தாலும்,  ஐரோப்பியாவில் வாழ்ந்தாலும் , ஒரு நோய் வந்தால்  ஒரு  மதகுருமாரையோ , மாந்த்ரீகனையோ சார்ந்து இருந்திருப்பீர்கள். மதகுருமார்களின் கடைசி கோட்டையாக திகழ்ந்த,  மனநோய்கள் கூட,  அறிவியலாளரின் கைகளுக்கு படிப்படியாக இடமாறியிருக்கின்றன. பேயியலின் இடத்தை நரம்பியலும் , பேயோட்டுதலின் இடத்தை ''புரோசாக் '' மாத்திரைகளும் எடுத்துக்கொண்டன.  
பாரம்பரிய மதங்களான இந்துமதம் , கிறிஸ்தவம் ,இஸ்லாம் யூத , ஜென் மதங்கள் அனைத்தும் தமது ஆடுகளத்தின் பெரும்பகுதியை இழந்துவிட்டன.  அறிவியல் மதங்களின் , தெய்வங்களின் இடத்தை இட்டு நிரப்பிக்கொண்டு இருக்கின்றன . என்கிற யுவாலின் பார்வை ஒரு மரபின் மீதான வெறுப்பு அல்ல.  மாறாக நம்முடைய சவால்கள் வேறு மாதிரியானவையாக இருக்கின்றன.  என்கிற அறிவுறுத்தலை முன் வைக்கிறது. 

தன்னுடைய சொந்த மதமான யூத மதத்தை,  தொடர்ந்து எல்லா அத்தியாயங்களிலும்,  விமர்சிக்கும் யுவால்.  அதற்கு இணையாகவே, இஸ்லாம் , இந்து ,கிறிஸ்தவ மதங்களின் போதாமைகளை, சமகாலத்தில் அவற்றுக்கான   முக்கியத்துவம் மற்றும் பொறுப்புகள் குறித்து,  தெளிவாகவே  தன் தரப்பை முன்வைக்கிறார்.  எனினும் புத்தமதம் மீதும், அதன் அடிப்படைகளிலும்,  ஒருவித சார்பு இருப்பதை,  ஆங்காங்கே காணமுடிகிறது.

தீவிரவாதம் குறித்து,  நமக்கு அடிப்படையில் ஒவ்வாமையும் அச்சமும் இருந்தாலும், யுவால் அதை நேர்த்தியாக நமக்கு சொல்லிக்கொடுக்கும் விதம். ''பீதியடைய தேவையில்லை'' எனும் அத்யாயம் 21ஆம் நூற்றாண்டின் 21பாடங்களில் முக்கியமான ஒன்று.

மற்றவர்களுடைய மனங்களை கட்டுப்படுத்துவதில்,  தீவிரவாதிகள் வல்லவர்கள். வெகுசில மக்களை கொல்வதன் மூலம்,  பலகோடிக்கணக்கான மக்களை அச்சுறுத்துவதிலும்,  ஐரோப்பிய ,அமெரிக்கா , போன்ற மாபெரும் அரசியல் கட்டமைப்புகளை, உலுக்குவதிலும் அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.
 
2001ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் { ஈராக் , ஆப்கானிஸ்தான் ,சிரியா ,பாகிஸ்தான் உட்பட} சுமார் 25000 மக்களை கொன்றுள்ளனர், எனினும்  போக்குவரத்து விபத்துகள் , காற்று மாசுபாடு, சர்க்கரை நோய் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 15லட்சம் மக்கள் வரை கொல்லப்படுகின்றனர்.  ஆகவே தீவிரவாதிகளை பற்றி பீதியடைய தேவையில்லை- மாறாக எல்லாவகையிலும் அவர்களை புறக்கணிக்க, சாத்தியமான வாய்ப்புகளை பட்டியலிடுகிறார். 

ஒரு தற்கொலை படை தாக்குதலை நிகழ்த்தி, நூறு பேரை கொள்வதன் மூலம்,  பத்து கோடி மக்களின் மனதில் , ஒவ்வொரு மரத்திற்கு பின்னாலும் ஒரு தீவிரவாதி இருக்கிறான்.  என்கிற கற்பனை பயத்தை விதைக்கின்றனர்.  நேர்நிலை சமூகமாக நாம் செய்யவேண்டியது, அந்த கற்பனை பயத்தை நீக்குவதும் , அதை முழங்கும் ஊடகங்களை புறக்கணிப்பதும் தான். ஒரே வழி.
 
எனினும் மனித முட்டாள்தனத்தை ஒருபோதும் குறைத்து மதிப்பிட்டு விடாதீர்கள் என  அந்த அத்தியாயத்தை முடிக்கிறார்.

ஜாதி, மதம் , இனம்,  உணவுப்பழக்கம், என சுயதம்பட்டங்கள்  , தற்பெருமைகள் , பெருமிதங்கள், இல்லாத ஒரு மனிதகுலம் கூட இந்த பூமியில் இல்லை எனலாம் , அதை பற்றிய அத்தியாயத்தை கையாளும் யுவால் ' உலகம் உங்களை சுற்றி இயங்கிக்கொண்டிருக்கவில்லை ' ஆகவே பணிவு தேவை.   என தொடங்கி, 
ஒவ்வொரு இனத்தையும், சான்றுகளுடன் சொல்லி சொல்லி நிராகரிக்கிறார்.

 முகமது நபிகளின் காலகட்டத்திற்கு முந்தைய அனைத்து வரலாறும் பொருத்தமற்றவை.  என்றும் மனித குலத்தின் அனைத்து நல் அம்சங்களுக்கும், மூலாதாரமாக  குரான் விளங்குகிறது. என அடிப்படை வாத இஸ்லாமியர்கள் கருதுவது போல.  அறிவியல் கண்டுபிடிப்புகளான  வானவூர்தி, ஏவுகணைகளை முறையே  மாமுனிவர் பரத்வாஜரும் , விசுவாமித்ரரும்,  கண்டுபிடித்ததாக, அடிப்படைவாத இந்து கருதுகிறார்.   இப்படி ஒவ்வொரு தரப்பையும் சொல்லிக்கொண்டே வரும் யுவால்,   தனது யூத மதம் குறித்து பேசுகையில், எண்ணற்ற தரவுகளும் ,மேற்கோள்களையும் காட்டி அடிப்படைவாத யூத மனநிலையை நிராகரிக்கிறார் . 

ஒருமுறை, இஸ்ரேலில்  ''யோகா'' கற்றுக்கொள்ள சென்ற யுவாலிடம்,  அந்த யோக ஆசிரியர்,  யோகத்தை கண்டுபிடித்தவர், 'ஆப்ரகாம்'  தான். என்று கூறி  ''திரிகோணாசனம்''-  அலெஃப்  என்கிற ஹீப்ரு எழுத்து வடிவத்தை ஒத்து இருக்கிறது, ஆகவே , ஆபிரகாம் தான் யோகக்கலையை, தன் மகனுக்கு கற்றுக்கொடுத்து , அவர் அதை இந்தியவில் பரப்பினார்.  என்று  ஆதியாகமம் 25.6 ஐ,  மேற்கோள் காட்டுகிறார். இந்த சம்பவத்திற்கு பின்னர் யுவால் அங்கு செல்வதை கைவிடுகிறார் .


மதத்திலிருந்து கடவுள் கொள்கைக்கு செல்லும் யுவால், பலதெய்வ வழிபட்டுக்கொள்கையை விட,  ஓரிறை கொள்கை கொண்ட மதங்கள், எப்படி வன்முறையும் , மூர்க்கமும் கொண்டவையாக,  வரலாறு முழுவதும் திகழ்ந்தன. என்றும், குத்திக்காட்டுகிறார்.

அறிவுசார் செயல்பாட்டில் முன்னர் எப்போதையும் விட, இன்றைய மனிதன் தீவிரமாக ஈடுபட்டுள்ளான், துரதிஷ்டாவசமாக, முன்னர் எப்போதையும் விட, மிகக்குறைந்த அளவே தெரிந்து இருக்கிறது.  ஏனெனில் இணையத்தில் இலவசமாக கொட்டிக்கிடக்கும்,  உண்மையற்ற தகவல்கள், அவர்களுக்கு  ஒருபோதும் அறிவுசார் செயல்பாட்டிற்கு உதவாது. உலகின் எங்கோ  ஒரு மூலையில் உட்கார்ந்துகொண்டு,  ஒரு கோடீஸ்வரர் உங்கள் மூளையை சலவை செய்து,  தன்னுடைய தொழிலை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார் .  உங்கள் பொன்னான  நேரத்தை அவருக்கு தருவதன் மூலமாக  ஏமாந்துகொண்டிருக்கிறீர்கள் .  ஏனெனில் ஒரு நல்ல தரமான அறிவியல் கட்டுரையும் , இயற்கை சார்ந்த,  ஆராய்ச்சி கட்டுரையும்,  விலையுயர்ந்ததாக இருக்கிறது. எனவே,  நாம் கவனமாக இருக்கவேண்டிய,  இணைய சாதனங்களை பற்றி பட்டியலிடுகிறார்.  


கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பற்றி,  இதுவரை யாரும் பேசாத புதிய கோணத்தில்,  பல்வேறு திறப்புகளை தரும் யுவால் ,  இன்று பிறக்கும் ஒரு குழந்தை, எல்லாம் நல்லபடியாக இருந்தால் 2050ல் முப்பது வயதாகியிருக்கும் , அன்று உலகம் இப்படித்தான் இயங்கும்.  என யாராலும் கணிக்க முடியாது. என்பதால்,  அந்த குழந்தைக்கான, சரியான கல்வி இது தான்.  என்பதையும் யாராலும் சொல்ல முடியாது.
 எனினும்,  ''நிரந்தமான ஒரு வேலை'' என்பது இனி வேலைவாய்ப்பு உலகில் சாத்தியமே இல்லை.   தகவல் தொழில்நுட்ப புரட்சியும், வேலைவாய்ப்பு சந்தையும்,  பலகோடி ''உதவாக்கரைகளை'' வெளியே தள்ளப்போகிறது.  அதே நேரத்தில்  எந்த மதிப்பும் , ஊக்கமும் இல்லாத,  கோடிக்கணக்கான வேலைவாய்ப்பை உருவாக்கப்போகிறது.

 இதில்,  உங்கள் குழந்தை எந்த எந்தக்குழுவில் இருக்கவேண்டும்.  என்பதை, இன்று முதல் அந்த குழந்தைக்கு,  உளச்சமநிலையை தக்கவைத்துக்கொள்வதை, மிகச்சரியாக சொல்லிக்கொடுப்பதன் மூலமாகவே,  அடையமுடியும்.  என முடிக்கிறார்.


இறுதி அத்தியாயத்திற்கு முன்னதாக,  இந்த உலகின் ஆதி கேள்வியான ,  நான் யார் ? வாழ்வின் பொருள் என்ன?   என்கிற கேள்விக்கு, அறிவியல் , மதம் , அரசியல் ,கடவுள்  என,  பல்முனை சாத்தியங்களின் வழியாக விடைகாண முயலும்  யுவால் ,  துணைக்கு  அழைத்துக்கொள்ளும் கருதுகோள்  ஆச்சரியமாக , ''சுதர்மம் '' எனும் 'உன் இயல்புக்கு தகுந்த ஒன்றை தீவிரமாக செய்தல்' அதன் மூலம்  நிறைவடைதல்'  என்கிற சித்தாந்தத்தை முன்வைக்கிறார்.   அதற்கு, அர்ஜுனனுக்கு உரைக்கப்பட்ட கீதையையும், அதன் தொடர்ச்சியாக, அந்த உபதேசத்தை,  நவீனப்படுத்தி சொல்லப்பட்ட  ' த  லயன் கிங் '' படத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.

எனவே,   பிரபஞ்சத்தை பற்றிய  உண்மையையும் , வாழ்வின் அர்த்தத்தையும் , உங்கள் சொந்த அடையாளங்களையும்,   தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் கேள்விகளையும் , துன்பத்தையும் , கூர்ந்து கவனித்து, அது  என்ன? என்பதை ஆய்வு செய்வதிலிருந்து தொடங்குங்கள். அதுவே சிறந்த வழி  என்று அந்த அத்யாயம் முடிகிறது.

அனைவருக்கும் ஒரே தீர்வு. ஒரே பதில் என்பது எப்போதும் ஆபத்தானது, என்கிற பீடிகையுடன் தான்  இறுதி அத்யாயமான தியானம் - வெறுமனே அவதானியுங்கள் - தொடங்குகிறது. 

விபாசனா தியானமுறையில் தான், அடைந்த பயன்களை பட்டியலிடும் யுவால், சேப்பியன்ஸ் ,ஹோமோ டியஸ்.  போன்ற மாபெரும் வெற்றிப்படைப்புகள்  நிகழ விபாசனா ஒரு முக்கிய காரணம் என குறிப்பிடுகிறார் .


மனதின் மர்மங்களை புரிந்து கொள்வதற்கு நம்மிடம் அறிவியல் சார் கருவிகள் இல்லை.   

பல அறிஞர்கள் மனதை மூளையுடன் போட்டு குழப்பிக்கொள்கின்றனர். மூளை என்பது நரம்பணுக்களையும் , நரம்பு இணைப்புகளையும்,  உயிர்வேதி பொருட்களையும், உள்ளடக்கிய ஒரு பின்னாலமைப்பு.

 மனம்  என்பது வேதனை, இன்பம், கோபம்.  என  அகரீதியானது.  ஆகவே , படிமுறைத்தீர்வுகள்  நம் சார்பில் தீர்மானங்களை மேற்கொள்ளத்தொடங்குமுன்,  நாம் நம்முடைய மனங்களை புரிந்துகொண்டு விடுவது நல்லது  '' என இந்நூல்   முடிகிறது.


ஏற்கனவே இரண்டு நூல்களையும் மொழிபெயர்த்து, சரியாக தடம் பார்த்துவிட்டதால், நாகலட்சுமி சண்முகம் அவர்களுக்கு இந்நூல் இன்னும் சிறப்பாக கைகூடியிருக்கிறது, முக்கியமாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சொற்கள், தெளிவாக மொழிபெயர்க்கப்ட்டுள்ளது .

தனக்கு சாதகமான பகுதிகளை மட்டும் மரபிலிருந்து எடுத்து கையாள்கிறார்.
தெளிவான பதில் ஒன்றை சொல்ல மறுக்கிறார்.
வரும் உலகை இருள் நிறைந்ததாக கற்பனை செய்கிறார்.
என யுவால் ஹராரி மேல் ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தாலும். 

ஒரு அறிஞரை முற்றோதல் செய்தோம் என்கிற மனநிறைவும், உலகின் செல்திசையை,  பல்துறை அறிஞர்  ஒருவர் தன்னுடைய பெரிய விளக்கின் மூலம், வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். அதை தெளிவாக நம்மால் பார்க்க முடிந்திருக்கிறது என்கிற திருப்தியுடனும். நன்றியுடனும் இந்நூலை முடிக்கலாம்.

Sunday, February 6, 2022

யோக அறிமுகம்

 பெரும்பாலும் நான் கவனித்த ஒன்று , ஜெயமோகன் சார் நம்மை அறிமுகம் செய்து வைத்தபின்னர் தான் இன்னும் கூர்மை கொள்கிறோம்.

கடந்த சில வருடங்களில் நான் நடத்தும் வகுப்புகள் பெரும்பாலும் சிறப்பாகவே இருந்தது என்று நண்பர்கள் சொல்வதுண்டு, அதற்கு காரணம் தீவிரமான தயாரிப்பு இல்லாமல் நான் ஒரு வகுப்பைக் கூட தொடங்கியது கிடையாது.
இந்த அர்பணிப்புக்கு முக்கிய காரணம் ஜெயமோகன் போன்ற ஒரு ''மாஸ்டர்'' நம்மை நோக்கி கை காட்டியபின் சாதாரணமாக எதையும் செய்ய முடியாது, மிகுந்த கவனமும் , அர்ப்பணிப்பும் ,தேவையாகிறது என்பது தான்.
இந்த நிகழ்ச்சி ஒரு சிறு முயற்சி தான் . வகுப்புகள் இன்னுமே ஆழமானவை.
நன்றி மாஸ்டர் ஜெ .


https://www.jeyamohan.in/156241/?fbclid=IwAR3TvS0oeyDmSQc0rqqz1t19IJvKx794z0_e0Zu90RshIe2uvbaD2mN9Y8A



ஜின்களின் ஆசான் -



இந்த வருடத்தின் முதல் நாவல் வாசிப்பு,
சூபி மரபும், மாய யதார்தமும்,கலந்த நாவல்.



 https://www.jeyamohan.in/161276/






Tuesday, January 11, 2022

கதீட்ரல்- எனும் ஆடல் சபை

 INCEPTION- படம். கனவு சார்ந்த,  அறிவியல் , தொழில்நுட்பம் , கற்பனை  என மூன்று கோணங்களில் எடுக்கப்பட்ட சரியான கதை கட்டுமானமுள்ள ஒரு  படம்  இதில்  அடுத்தவர் கனவுக்குள் ஊடுருவுதல் , அவர் கனவில் சில நிகழ்வுகளை விதைத்தல் , அதை  உலகியல் சார்ந்த பயனுக்கு, உபயோகித்துக் கொள்ளுதல்.  என  வலுவாக பின்னப்பட்ட திரைக்கதை .  


அப்படி,  அடுத்தவர் கனவில் ஊடுருவுவதும், அதிலிருந்து வெளிவருவதும், என  தொழில்நுட்பமாக பேசப்பட்டாலும்,  கனவில் இருப்பவர், மயக்கத்தில் இருக்கிறாரா ? நிஜஉலகில் வாழ்கிறாரா? என கண்டறிய. முக்கியமான கருவியாக ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய குறியீட்டு ரீதியான ''ஒரு  பொருள்'' வழங்கப்படுகிறது.   உதாரணமாக.  கதாநாயகனுக்கு  சுண்டுவிரல் அளவிலுள்ள சிறிய 'பம்பரம் '  இந்த பம்பரம் சுழலும் போதெல்லாம் நாயகன் நிஜ உலகில் இருக்கிறான்  என காட்டப்படுகிறது .

இப்படி குறியீட்டு ரீதியான பொருள் நாம் அனைவருக்கும் எதோ ஒன்று தேவையாகிறது அது நம்மை கனவிலிருந்தும் , வேதனையிலிருந்தும்  மீட்டுவந்து நிஜத்தில் அமரச்செய்கிறது.

'கதீட்ரலில்' தூயன் செய்திருக்கும் மாயமும் அதுதான்.  தனது தனித்துவமான கற்பனை மூலம்  தேர்ந்த குறியீட்டு சொற்களை,  கச்சிதமாக அடுக்கி ஒரு  தேவாலயத்தை போல கட்டி  எழுப்பி மனித அறிவு சேகரம் எனும் அகங்காரத்தை கோபுரத்தின் உச்சியில் வைக்கிறார்,  பின்னர் இயற்கையின் ஆடலுக்கு அந்த கட்டுமானத்தை ஒப்புவித்து,  புயல் கொண்டு சிதறியடிக்க செய்து, மண்மேடு என மனித அறிவை பிசுபிசுத்து போகச்செய்கிறார். 

அதற்கு துணையென வரலாற்றை, மனித அகந்தையை , உளப்பகுப்பாய்வை, காலத்தை , என தொடர்ந்து பல்வேறு பகடைகளை உருட்டி, உருட்டி நம்மை திகைக்க செய்கிறார் 
முக்கியமாக இந்த நாவலின் மொழி. 

 பொதுவாக யுவன் , போன்றோர் தங்களது புனைவுகளில்  பல்வேறு சாத்தியங்களை நிகழ்த்தி காட்டியிருப்பார்கள். அந்த வரிசையில்   நீண்ட இடைவெளிக்கு பின்னர், தூயன் இதை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்.

மேலே சொன்னது போல வரலாறுக்குள் நாம் செல்கையில் ஒருவித கனவுத்தன்மையில் தான்.  சென்று தொட்டு துழாவி சிலவற்றை புரிந்து கொள்ள முடிகிறது.  அதற்கான கூர்மையான மொழியும் ,குறியீடும் இல்லையெனில், தட்டையான கதை கேட்கும் சலிப்பு வந்துவிடும். அது  இங்கே நிகழவில்லை .

கதைக்களம்.  ஒரு பழமையான தேவாலயம்.  காலம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பஞ்சம் ஆடிமுடித்து , மிஞ்சிய மனிதர்கள், அனைத்தையும் செய்து, கிடைத்ததை உண்டு , உயிரை தக்கவைத்துக் கொண்டிருந்த காலம்.   தேவாலயத்தின் தலைமை  பாதிரி, நோய் கண்டறிபவன் , உளப்பகுப்பாய்வு ஆராய்ச்சியாளன் என பன்முக தன்மை கொண்ட   நீட்ஷன்,  கதையின் மையம்.
  எனினும் அவந்திகையும் ,ஆப்ரஹாமும் தான் நாவலின் முதுகெலும்பு. 

பங்காவாலாவாக வரும் ஆப்ரஹாம் சைகைகள் மூலம் மட்டுமே உரையாடக்கூடியவன்,  அவந்திகையோ ஒரு யட்சியென ,அறிவார்ந்தவள் என ஒற்றை இலக்குடன் கதீட்ரலுக்குள் நுழைந்தவள். என பிரமிக்க வைக்கும் ஒரு ஆளுமை.

 நாவலின் மற்ற அனைத்து பாத்திரங்களும் இவர்கள் மூவருடனும் வந்து இணைந்து நாவலை உச்சி நோக்கி கொண்டு செல்வது தான் நாவலின் மாயம் . 

ஒரு மறைப்பிரதிக்கான  உள்ளடக்கத்துடன் , இரண்டு படிப்பினையை நாவல் பேசுகிறது முதல் படிப்பினை, மனித அகந்தையால், பிறர் ரத்தம் பெற்றேனும்  கட்டி எழுப்பப்படும், அனைத்து வெற்றி பதாகைகளும் ,மாடங்களும் அதனடியில்  ரத்தக்கறை படிந்த சாபம் ஒன்றை துளி நெருப்பென ஆழத்தில் வைத்திருப்பவை.

இரண்டாவது படிப்பினை என 'தன்முனைப்பு ' எனும் ஆதி இச்சையை சொல்லலாம் .

கிழக்கிந்திய கம்பெனி,  உலகம் முழுவதிலும்  திரட்டப்பட்ட அடிமைகளின் பிணக்குவியல்களுக்கு மேல் தான் நமது தேயிலை தோட்டங்களும்,  ரப்பர் தோட்டங்களும் கட்டி எழுப்பப்பட்டது.  அதன் சாபம் உலகப்போர் , செயற்கைப்பஞ்சம் , காலனியாக்க முடிவு , சில கோடி உயிர்பலி என  நிறைவடைந்தது .  
இந்நாவலில் வரும் சித்திரம்  அதன் சுருக்கப்பட்ட வடிவம் என்ற கொள்ளலாம்.

இரண்டாவது படிப்பினை 'தன்முனைப்பு' என அகந்தையுடன் முன்வைக்கப்படும். மனித அறிவு சேகரம் மதம் என்றும் மதத்திற்கு எதிரான புரட்சி என்றும் , அறிவியல் என்றும் அறிவியலுக்கு எதிரான அறியாமை அல்லது மூட நம்பிக்கை என்றும்,  கருத்து என்றும் கருத்துக்கு எதிரான வன்முறை என்றும்,  கடந்த முந்நூறு வருடங்களில் கொன்று குவித்த உயிர்கள் இன்னும் முந்நூறு ஆண்டுகளுக்கு எண்ணிக்கொண்டே இருக்குமளவு அதிகமானது.

நாவலில் வரும் தேவாலயம் கட்டப்படும் சித்திரம் குரூரமானது. மலையின் உச்சியில் எளிதில் மனிதர்கள் சென்று சேர்ந்து விட முடியாத இடத்தில் லாட வடிவில் ஏன் ஒரு தேவாலயம் கட்டப்பட வேண்டும் ?  
அங்கே இறை தாண்டி வேறு எதோ குடி கொள்ளப்போகிறது. என்கிற ஐயம் நமக்கு எழும் தருணத்தில். விடையென நம்முள் ஒன்று திரள்கிறது.
 
பரம்பரை கட்டிட வல்லுநர்களை , கூலிக்கு அழைத்து வந்து வேலை முடிந்ததும்,  பாதி பேரை அனுப்பி விட்டு மீதி நபர்களை தக்க வைப்பதில் இருக்கும் மெல்லிய சந்தேகம்  அடுத்த அத்தியாயத்தில் துலங்கி வருகிறது . 

தங்களது ஞானம் , ரத்தம்,  உயிர்,  என அனைத்தயும் செலுத்தி கதீட்ரலை கட்டி முடித்து கொடுத்தாதவர்களுக்கு, சன்மானமென கிடைப்பது  வேறொன்று.  அவர்களது அப்பாவி தன்மையையும் மீறி அவர்கள் கைகளால் கட்டிடத்திற்கு அதன் அழிவுக்கான மைய அச்சு, ஒரு 'பொறி' என வைக்கப்படுகிறது,  அந்த சாபம் எனும் அச்சு தலைமுறைகள் தாண்டி, இயற்கை சீற்றம் எனும் புயல் வடிவில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

 நீட்ஷன்- உளப்பகுப்பாய்வு ஆராய்ச்சி எனும்  துறையில் தனக்கான ஒரு உயரத்தை, இடத்தை அடைய, பல்வேறு சிகிழ்ச்சைகளையும் , பரிசோதனைகளையும், அதற்கேயுரிய ரகசியங்களுடன் செய்து, அதற்கான நூல் ஒன்றை உருவாக்க முயல.  மேலோட்டமாக நோக்குகையில் இது  மனித இனத்திற்கான தொண்டு என்றும், கருணையும் அறிவும் கொண்ட செயல்பாடு என தோன்றினாலும் அடியில் இருப்பது வேறு ஒன்று என்கிற நெருடல், அவருடைய அத்தியாயம் தோறும் வருகிறது .  

பங்காவாலாவாக வரும் ஆப்ரஹாமின் சித்திரம் நமது மனதுக்கு நெருக்கமான ஒரு குழந்தையின் அறியாமையுடனும் , அனைத்தியும் அறிந்துவிட துடிக்கும் துடிப்புடனும் , தூயன்  இழைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

வாய் பேச இயலாத காது கேளாத என்கிற ''பங்கா வாலா''க்களின் அடிப்படை தகுதியுடன் தான் ஆப்ரஹாம் கதீட்ரல் வந்து சேருகிறான்.  எனினும் சைகைகளால் ஒரு நாவல் முழுவதையும் வாசகருக்கு கடத்திவிடும். மொழியின் லாவகம் அற்புதமான ஒரு அனுபவம். 

ஆப்ரஹாம் உரையாடுவது நம்மிடமல்ல  அவந்திகை எனும் பெண்ணுடன். அவள் இவனை கருவியென தன் லட்சிய இலக்கை நோக்கி ஒரு பூனைக்குட்டியை போல இட்டுச்செல்கிறாள்.  இவனோ முலையுண்ணும் மகவென பின் செல்கிறான், காமம் என்றோ , காதல் என்றோ , கருணை, பாசம்,நட்பு என்றோ எந்த இடத்திலும் பொருத்திவிட்டு முடியாத ஒரு உறவு இங்கே சொல்லப்படுகிறது. அது இயற்கை எய்த இரு அம்புகள் அருகருகே பயணித்து ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் சிலநாள் பயணம் .

முற்றாக உன்னை கொடு நான் பிறிதொன்றாக உனக்கு திருப்பியளிக்கிறேன்-  என்கிற கோரிக்கையை முன் வைப்பவை கடைசி அத்தியாயங்கள் . 
 
சுந்தர ராமசாமி அவர்களின்  'புளியமரத்தின் கதை'  சொல்லும் மொழி ஒரு உச்சத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கும் அங்கிருந்து மேலெழுந்து வேறொரு தளத்தில் மொழியின் அன்றைய அனைத்து சாத்தியங்களையும் பரிட்சித்து பார்க்க 'ஜே ஜே சில குறிப்புகள் ' வேறு வகையில் நிகழ்ந்திருக்கும். 

அதேபோல் ''வென்று தணிந்தது காடு'' என உரக்க சொன்ன பாரதியின் மொழி அவருடைய கட்டுரை தொகுப்பில் நம்மை ''என்னுடன் விளையாட வா'' என அழைப்பது போன்ற சிநேகித பாவத்தில் அமைந்திருக்கும் .  
யுவன் , நாஞ்சில் நாடன்  , ஜெயமோகன் ,  என  தனது  முன்னோடிகளின்,  முகடுகளிலிருந்து, முகடுகளுக்கு மொழியால் தாவும்  தந்திர வித்தையை தூயனும் முயற்சித்து வென்று இருக்கிறார்.

நாவலின் போதாமை என ஒன்றை சுட்டி காட்ட வேண்டுமெனில்,  இன்னது தான் கதை என சொல்லிவிட முடியாத அளவிற்கு. கோட்டோவியம் போல செல்லும் கதை.  
அது சரி இதெப்படி குறை என்று ஆகும் ?

Sunday, January 2, 2022

Featured Post

Maleysia yoga retreat

 Malaysia yoga retreat https://www.jeyamohan.in/199529/