Friday, April 12, 2024

Sunday, April 7, 2024

YOGA- 6

 


இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே !!!

 

 

 இந்த நாள்  மிகச்சிறப்பாக அமைந்தது என்பதை நாம் அனுபவிக்கக்கூடிய தளங்கள் தான் முதல் மூன்றும்.  உடல் இலகுவாக, சொன்ன வண்ணம் இயங்கிக்கொண்டும் , ஒருவித துள்ளலுடனும், பெரும்பாலான வேலைகளை ஒரு நடனம் போல இயல்பாக நிகழ்த்த முடிந்தால் , உடலில், அதாவது அன்னமய கோசத்தில்  இன்பத்தை அடைந்திருக்கிறீர்கள் என்றே பொருள். சுறுசுறுப்பும் உற்சாகமும் பாட்டும், சிறு விசிலும் , களைப்பின்றியும் இந்த நாள் முடிந்தால் , உங்கள் பிராணமய கோசத்தில் அதன் முழுமையை அனுபவித்து இருக்கிறீர்கள் என கொள்க. எவ்வித பதட்டமுமின்றி மனம் ஒரு ரம்யமான இசை போல ஒழுகிச்சென்று, மீண்டும் மீண்டும் உதட்டிலும் மனத்திலும் புன்னகையை நிறைத்து வைத்திருந்தால், உங்கள் மனோமய கோசம் அதன் முழுமையை அடைந்து ததும்பி நிற்கிறது என்றே உணர்க. இதற்கு நேர்மாறாக இந்த மூன்று கோசத்திலும் நிகழ்ந்தால் அந்த நாள் ஒரு ஒவ்வாத நாளாக நாம் அனுபவிக்கிறோம்.  ஆக , நமது வாழ்வின் பெரும்பகுதி முதல் மூன்று தளத்தின் முழுமையிலும் , போதாமையிலும் தான் அமைந்து இருக்கிறது. ஒரு ஹடயோகியானவன் , சாதகன்,  அடையக்கூடிய அடிப்படை பயன் என்பது இந்த முக்கோண தளத்தை இணைப்பது தான்.  ஒன்றுடன் ஒன்று இணையாமல் துண்டிக்கப்பட்டிருந்த இந்த முக்கோணத்தின் முனைகள் மிகச்சரியாக,  ஒரு பயிற்சி திட்டத்தின் மூலம், இணைக்கப்படட உடனேயே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் இந்த முக்கோண வடிவம் {  உடல், உயிராற்றல்  மனம் } முழுமையை வெளிப்படுத்துகிறது, அந்த சாதகன் சாமானியன் யாரை விடவும், அனைத்திலும் ஒரு படி மேலானவனாகிறான்.

 

எனினும் இந்த மூன்று தளங்களின் ஒருங்கிணைப்பு மட்டுமே ஒரு முழு வாழ்வை தந்துவிடாது என்பதால், யோகமரபும் , வேதாந்த மரபும் மேலும் சில தளங்களை சொல்கிறது, நான்காவது தளமான  விஞ்ஞான மாய கோசம் பற்றி கடந்த பகுதியில் பார்த்தோம், இந்த நான்கு கோசங்களும் ஒன்றில் ஒன்றென சரியாக அமைகையில், நாம் ஆனந்த மய கோசம் எனும்  தளத்தில் சென்று அமர்கிறோம்.

இந்த ஐந்தாவது தளத்தை பற்றி விளக்குவதில் இருக்கும் மாபெரும் சவாலே, எத்தனை சொற்களை போட்டு நிறைத்தாலும் இன்னும் சொல்வதற்கு மீதமிருக்கும் நிலை அது, ஆகவே அத்தனை  மகான்களும் தாங்கள் உணர்ந்த அல்லது அனுபவித்த இந்த நிலையை பற்றி, உவமையாக சிலவற்றை சொல்ல முயற்சி செய்கின்றனர்.

உதாரணமாக இரண்டு உவமைகள் இங்கே பேசப்படுவதுண்டு. ஒன்று  தேனின் சுவை - நான் எவ்வளவு தான் தேனின் சுவை பற்றி உங்களுடன் மணிக்கணக்காக உரையாடினாலும், இனிமை , இனிப்புச்சுவை, தித்திப்பு, என்கிற வார்த்தைகளை உபயோகித்தாலும்,  இனிப்பு பற்றி அறிந்திருக்காக ஒருவருக்கு சொல்லி புரிய வைக்கவே முடியாது , ஆனால்  எந்த மொழியும் தெரியாத ஒருவருக்குக்கூட  ஒரு சொட்டு தேனை கொடுத்தால் அவர் அதை அனுபவமாக மாற்றிக்கொள்ள முடியும். இது தான் ஆனந்த மய கோசம் பற்றி சொல்ல முடியக்கூடிய முதல் உவமானம்.

அடுத்ததாக இறைநிலை அல்லது இரண்டற்ற இறையுடன் கலந்தநிலை   என்பதை குறிப்பிட  'உப்புப்பதுமை கடலில் கரையும்' உவமானம்.

உபநிடதங்கள் நம் இருப்பை அன்னமயம், பிராண மயம் , மனோமயம் , விஞ்ஞான மயம்  ஆனந்த மயம் என படிப்படியாக ஏறுவரிசையில் சுட்டுகிறது.  இதில் ' மயம் ' என்பது மயட் '' என்கிற வேர்ச்சொல்லின் திரிபு. இதற்கு ''ஒன்றாலேயே ஆனது'' அல்லது ''ஒன்று மற்றொன்றாக மாறுவது, நிரப்பப்படுவது''. என பொருள்  ஆக, ஆனந்த மயமான நிலையை அடைவதேயே, அதாவது ஆனந்தமே உருவான பிரம்மத்தை அல்லது முழுமுதல் நிலையை அடைவதையே குறிக்கோளாக கொண்டுள்ளது நமது மரபு. யோகமரபு பிரம்மத்தை அடைவதை குறித்து எதுவும் பேசுவதில்லை, அது முற்றிலும் சமாதிநிலை அல்லது கைவல்ய நிலை குறித்து மட்டுமே பேசுகிறது.

 

 

ஆக  ஒரு பயிற்சி என்பது படிப்படியாக ஒருவரை இந்த ஐந்து கோசங்களிலும், ஒரு மாபெரும் மாற்றத்தை, ஏற்படுத்தி, சிறிது சிறிதாகவேனும் நம்மை மேம்பட்ட நிலையை நோக்கி அழைத்துசெல்ல முடிந்தால் அப்படியான ஒரு பயிற்சி திட்டத்தை நாம் வாழ்நாள் முழுவதும் கைகொள்ளலாம்.

அதில் யோகப்பயிற்சிகள் மிக சாதகமாக இருப்பதால், நமக்கான ஒரு குறிப்பிட்ட திட்டத்தை  தேர்ந்து எடுக்கலாம். பயிலலாம், அதன் பயன்களை அடையலாம்.

எனினும் சரியான யோகக்கல்வி என்பதை எப்படி தேர்ந்தெடுப்பது என்பது பற்றி நம் அனைவருக்குமே, தயக்கமும் ,குழப்பமும் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு நோய்க்கான மருந்தை தேர்ந்தெடுப்பதில் , நம் குழந்தையின் மேல்படிப்புக்கான கல்லூரியை தேர்ந்தெடுப்பதில் , எப்படி நாம் அடிப்படையான சில அளவீடுகளை வைத்திருக்கிறோமோ, அதே போலத்தான் ஒரு நல்ல யோகக்கல்வியை அல்லது பயிற்சியை தேர்ந்தெடுப்பதிலும் சில அளவீடுகள் இருக்கிறது.


Friday, April 5, 2024

YOGA-5

 


உள்ளே உறையும் உயர் அறிவை மீட்டெடுத்தல்.

 

 

இந்த பகுதியில் நாம், மனோமய கோசத்திற்கு அடுத்த தளமான, உயர் அறிவின் உறைவிடம் என்று சொல்லப்படும் விஞ்ஞான மய கோசம் பற்றி பார்க்கலாம்.

நாம் ஏற்கனவே சொன்னது போல , இந்த ஐந்து தளங்களும் ஒன்றைவிட ஒன்று சூட்சுமமாக இருக்கிறது, உடலை விட மூச்சு இன்னும் ஆழத்தில் இருக்கிறது, மூச்சை விட மனம் இன்னும் ஆழம் கொண்டது, இந்த மனமும் ஆழத்தில் தன் சம நிலையை அடையும் பொழுது உயர் மனம் சிறிது விழிப்படையும் பொழுது ஏற்படும் நிலையை நாம் உள்ளுணர்வின் தளம் என கொள்ளலாம் . இந்த உள்ளுணர்வே உயர் அறிவாக விஞ்ஞான மய கோசமாக மரபு வகை படுத்துகிறது.

உதாரணமாக நம்முடைய மனதை வைத்து நம் வாழ்வை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே அறிய முடிகிறது. இந்த மேல் மனதையும் , மேலோட்டமான புத்தியையும் வைத்து நாளை அல்லது வருங்காலம் சார்ந்து சில திட்டங்களை வகுக்கலாம். அது சார்ந்து குழப்பங்கள் , முடிவுகள் , சந்தேகங்கள் , என பலவாறாக நினைத்து பார்க்கிறோம். ஆனால் இந்த உள்ளுணர்வு எனும் உயர்மட்ட அறிவு நமக்கு எப்போதாவது ஒரு முறை நிகழ்கிறது. அந்த ஒரு கணத்தில் நம்மால் இன்னும் தெளிவாக நம் வாழ்வு பற்றியோ , வருங்காலம் பற்றியோ துல்லியமான காட்சி ஒன்று கிடைத்து விடுகிறது.

அப்படி  ஒரு காட்சியை அகத்தில் கண்டு விட்ட பின் நீங்கள் தவறான ஒரு செயலை அல்லது  தோல்வி அடையக்கூடிய ஒரு திட்டதை செயல்படுத்த மாட்டீர்கள் , ஏனெனில் விஞ்ஞான மய கோசத்தில் உச்சபட்ச அறிவுநிலை முதன்மையாக இருந்து உங்களுக்கு வழி காட்டுகிறது. அப்படியான தீர்க்க தரிசனங்கள் பெரும்பாலும் பொய்ப்பதே இல்லை எனலாம். எனினும் இந்த உள்ளுணர்வின் தளம்  நமது மொத்த வாழ்நாளில் மிகச்சிறிய அளவிலேயே நிகழ்கிறது. அல்லது இப்படி விழிப்படைந்த உயர் அறிவின் தளத்தை நம்மால் நீண்ட நேரத்திற்கு தக்கவைத்துக்கொள்ளும் தகுதியோ , ஆற்றலோ நம்மில் இல்லை.

 ஏனெனில் பெரும்பாலும் மேல்மனம் அடையும் பரபரப்பில் இந்த உயர்மனம் மறைந்து கொள்கிறது.

நமது கனவு நிலையை இந்த கோசத்திற்கு நிகராக சொல்லலாம் , நமது கட்டுப்பாட்டில் இல்லை எனினும் நமக்கு சிலவற்றை கனவுகள் உணர்த்துகிறது, அதை சரியாக உள்வாங்கிக்கொள்ள நமக்கு முடியாமல் போகலாம். ஆனால் நவீன உளவியல் ஆராய்ச்சியாளர்கள் வரை சொல்வது அதைத்தான்.

உதாரணமாக நமது குலதெய்வங்களை பற்றி நமக்கு தகவல் இல்லையெனில், நமது சொந்த ஊரின் மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து வந்து துணியில் கட்டி வாசலில் தொங்கவிட , ஒரு மாத காலத்திற்குள் நமது கனவில் நம் குலதெய்வம் தன்னை வெளிப்படுத்தும் என்பது ஒரு நம்பிக்கை.

 

சில சமயங்களில் நம் வீட்டின் பெரியவர்களுக்கு சன்னதம் அல்லது அருள் வந்து அவர்கள் வேறு ஒரு தளத்தில் நின்று சிறிது நிமிடம் பேசுவார்கள்.

 

அங்கே நமது மேல்மனம் , புத்தி , அனைத்தும் உயர்வான அல்லது இந்த பிரபஞ்ச இயக்க சக்தியுடன் இணைத்து கொண்டு சிலவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

அப்படியெனில்  உயர் தளத்தை தூண்டக்கூடிய ஆற்றல் எது ? இதை இயக்கும் எரிபொருள் எங்கிருக்கிறது ? இந்த போன்ற வினாக்களுக்கு நமது யோக   மரபில் சில பதில்கள் கிடைக்கிறது. அதாவது மேல்மனம் அடங்கும் பொழுது அதற்கு நாம் செலவிட்ட ஆற்றல் அனைத்தும் இந்த விஞ்ஞான மயன் நோக்கி செலுத்தப்படுகிறது. அப்படி செலுத்தப்பட்ட பிராணனே இங்கே எரிபொருளாகிறது.

பிராணன் என்பது மூச்சு என்று ஒரு தவறான கருத்து இங்கே உள்ளது, அதுவல்ல.

ஆக , விஞ்ஞான மயனை விழிப்படைய செய்ய ஒரு குறிப்பிட்ட அளவில் தியான நிலை அமைய வேண்டி இருக்கிறது. பிராணன் இல்லாத உடலால்  நல்ல தியான அனுபவத்தை தக்கவைத்துக்கொள்ள முடிவதில்லை.  ஆகவே யோகமரபு உடலிலிருந்து தொடங்குங்கள் என்று ஆணையிடுகிறது. அன்னமயத்தில் ஏற்படும் சமநிலை, பிராண மயனால் செறிவூட்டப்பட்ட உள்ளத்தில் திகழ்ந்து, தியான அனுபவத்தை கூர்கொள்ளச் செய்கிறது. அப்படி கூர் கொண்ட மனம், ஆழம் நோக்கி சென்று  விஞ்ஞான மயம் எனும் உயர் அறிவை , உள்ளுணர்வை தூண்டுகிறது. அங்கே கனவு நிலையென காட்சிகளும் , காலத்தை முன்னோக்கி பார்க்கவல்ல இயல்பும் , மனத்தெளிவும் உறைகிறது.

நமது முனிவர்களும் ரிஷிகளும் கவிகளும் திரிகால சஞ்சாரிகள் என்று நாம் சொல்வது இந்த கோசத்தில் அவர்கள் தொடர்ந்து இருந்ததால் தான். ஆகவே அவர்களால் காலத்தை முன்னோக்கி தரிசித்து வருங்காலத்தை நோக்கி பேச முடிகிறது.

யோக பயிற்சிகளில் சில இன்றைய நோய்களுக்கு தீர்வாக அமைவதுண்டு, உதாரணமாக, ஆர்த்தரைடீஸ் எனப்படும் மூட்டுவலி,இதற்கு ஜானு சக்ராசனம் என்று ஒரு பயிற்சி யோகத்தில் உண்டு  இந்த பயிற்சி கிட்டத்தட்ட  நானூறு ஐந்நூறு வருடங்களுக்கு முன்னர் கண்டு சொல்லப்பட்ட பயிற்சியாக இருக்கலாம், அந்த கால கட்டத்தில் அவர்களுக்கு மூட்டு வலி இருந்திருக்க வாய்ப்பே இல்லை . பிறகு ஏன் இந்த பயிற்சி ? அவர்களுக்கு ''தெரிந்திருக்கிறது ' இன்னும் ஐநூறு வருடம் கழித்து வரப்போகும் மானுடனுக்கு இது உதவலாம் என. இப்படித்தான் மரபு சில பயிற்சியை முன்வைக்கிறது. இது எதிர்காலத்தை பார்க்கத்தெரிந்த வல்லுநர்களால் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம். இப்படி ஒவ்வொரு மரபிலும் உண்டு . அது வல்லமை மிக்க மானுடர்களால் விஞ்ஞான மய கோசத்தின் துணை கொண்டு  ஏற்படுத்தப்பட்ட ஒரு திட்டம். ஆக, முதல் மூன்று தளத்திலும் நம்மை சூழ்ந்திருக்கும் எல்லைகளையும் , போதாமைகளையும் சரியாக கையாள்வதன் மூலம் நான்காவது தளத்திற்கு அடிக்கடி ‘’வந்துசெல்லும்’’ அரிய வாய்ப்பை பெறுகிறோம். விஞ்ஞான மய கோசத்திற்கு வந்து செல்வதென்பது நமது வாழ்விற்கான உயர் கேள்விகளுக்கான விடையாக, நமது அடிப்படை கீழ்மைகளிலிருந்து மேலெழ வாய்ப்பாக , நம்மை சூழ்ந்திருக்கும் அனைத்திற்கும் ஏதேனும் வகையில் நன்மை ஒன்றை வழங்குவதற்கு, இது அனைத்தையும் தாண்டி , அடுத்த தளமான ஆனந்தமய கோசத்திற்கான வாசலாக அமைகிறது.


 

 


Wednesday, April 3, 2024

YOGA- 4

 

துக்க காரணம்- மோட்ச சாதனம்- மனம்

 

கிரேக்க தொன்மத்தில் முதல் பெண்மணியான பண்டோரா என்பவளுக்கு கடவுளர்கள் அனைவரும் பரிசுப்பொருட்களை அளிக்கின்றனர், அதில் ஒரு பெட்டியை எக்காரணத்தை கொண்டும் திறக்கக்கூடாது என சொல்லப்படுகிறது. ஆனால் அவள் ஆர்வமிகுதியால் திறந்து பார்க்க அடைத்து வைக்கப்பட்டிருந்த  அத்தனை தீமைகளும், வெளியேறி உலகில் பரவிவிட்டது என்று ஒரு தொன்மக்கதை உண்டு.

இதை அப்படியே நமது மனம் எனும் கருவிக்கும் போட்டு பார்க்கலாம்.

நம் ஒவ்வொருவருடைய பண்டோரா பாக்ஸையும் திறந்து பார்த்தால், என்னவெல்லாம் வெளிவரும் என நாம் அறிவோம் . நவீன உளவியல், ஒரு மனிதருக்கு ஒரு நாளில் மட்டும் ஆறாயிரம் எண்ணங்கள் முதல் நாற்பதாயிரம் எண்ணங்கள் வருவதாக கணிக்கிறது. இவ்வளவு எண்ணங்கள் வந்து செல்லும் நாம் எப்படி சாந்தமான அமைதியான ஒரு மனிதராக இருந்துவிட முடியும்.

 

 

 

 

ஆக மனம் எனும் ஒரு மாபெரும் வலைப்பின்னலில் ஏதேனும் ஒரு கண்ணியில் சிறு அதிர்வு நிகழ்ந்தால் கூட மொத்த வலையும் பதட்டத்துடன் துடிதுடிப்பது போல தான் நம் மனம் சதா பரபரத்துக்கொண்டே இருக்கிறது.

 

நமது மரபில் சொல்லப்படும்   மூன்றாவது தளமான மனோமய கோசம் என்பது இந்த இடம் தான். எனினும் குறிப்பிட்டு சொல்லப்படும் ஒரு உடலுறுப்பு அல்ல.

இந்த மனம் எனும் கருவி எதோ தனித்து இயங்ககூடியதல்ல, அது உடலிலிருந்தும் , பிராணனிலிருந்தும் ஆற்றல் முழுவதையும் உறிஞ்சி    செலவு செய்தவண்ணம் இருக்கும் ஒரு கருவி  ஆகவே  நவீன மருத்துவம் மனதால் உடலில் உருவாகும் நோய்கள் என ஒரு நீண்ட பட்டியலை சொல்கிறது இதை 'சைக்கோ சோமாடிக் டிசீஸ்' என வகைமை படுத்துகிறது. 

இன்று நாம் அடிக்கடி கேள்விப்படும் முதல் பத்து நோய்களில் கிட்டத்தட்ட ஏழு நோய்கள் இந்த வகைமையை சேர்ந்தவை.

உதாரணமாக,  தந்தைக்கு சர்க்கரை நோய் இல்லாத நிலையில், மகனுக்கு வருவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருக்கிறது. அதற்கு மகனின் வாழ்க்கைமுறை மற்றும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணிகளை சொல்லலாம்.  எனவே சர்க்கரை நோய் என்பது பரம்பரை நோய் அல்ல மாறாக வாழ்க்கை மற்றும் மனம் சார்ந்த நோய்.

சிலர் ' நானெல்லாம் படுத்தா பத்துமணி நேரம் , பதினைந்து மணிநேரம் நல்லா தூங்குவேன் சார் ' என்று பெருமையாக

 சொல்வதை கவனிக்கலாம் அதேபோல சிலர் தொடர்ந்து எதையேனும் சாப்பிட்டுக்கொண்டே இருப்பதை கவனிக்கலாம், இப்படியாக  தூக்கமின்மை அல்லது அதீத தூக்கம், உடல் பருமன்  போன்ற நிலைகளை மனநோய் என்றே உளவியல் சொல்கிறது.

நவீன உளவியலும் , நமது யோக மரபும் சொல்லக்கூடியது, நம் மனம் நமக்கு தெரிந்த மேலடுக்கு மனம் மட்டுமல்ல நம்மால் புரிந்து கொள்ளவே முடியாத பல்வேறு அடுக்குகள் கொண்டது. அதனாலேயே நம்மால் எதையெல்லாம் மனதில் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் , எதையெல்லாம் வெளியேற்றி விடவேண்டும் என்கிற தெளிவு இல்லை. பத்து வருடத்திற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட நாளில் நாம் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்காக அவமானம் ஒன்றை அடைந்திருப்போம், அது இன்னும் மனதின் ஆழத்தில் ஒரு புண்ணாக ஆறாமல் இருக்கிறது, அதே வருடத்தில் மிக இனிமையான நாட்கள் சில கடந்து சென்றிருக்கும் அவற்றை நம்மால் நினைவில் மீட்ட முடிவதில்லை. இவ்வாறாகவே கோபம் , குரோதம் போன்ற எதிர்மறை பண்புகளை எப்படி கையாள்வது என்கிற நுட்பம் தெரியாத போது , நாம் நமக்கு தெரியாமலே இந்த உடலை ஏதோ வகையில் சிறிது சிறிதாக  அழித்துக்கொள்கிறோம்.

உதாரணமாக ஒருவருக்கு மரண பயமோ, நோய் வந்துவிடுமோ என்கிற பயமோ வந்துவிட்டால் அவரால் நிம்மதியாக தூங்க முடியாது. அந்த தூக்கமின்மை அவரை நோய் நோக்கி அழைத்துச்செல்லும். இதை சரிசெய்ய மருந்து மாத்திரைகள் மட்டும் தான் உதவும் என்று சொல்வதற்கில்லை.

மிகச்சரியாக தேர்ந்தெடுக்கப்படும் தியான பயிற்சி அல்லது ஒய்வு தரும் பயிற்சியால் வெறும் மூன்று மாதத்தில்  மேற்சொன்ன பிரச்சனைகளில் இருந்து முற்றிலுமாக வெளிவந்து விடமுடியும்.

யோகநித்ரா போன்ற பயிற்சிகள் மனோமய கோசத்தின் அனைத்து அடுக்குகளையும் சீர் செய்து சமநிலையை கொண்டுவருவதில் முக்கிய பங்காற்றி வருகிறது.

அதற்காக நவீன மருத்துவம் சொல்லக்கூடிய மருந்து மாத்திரைகளை கைவிட்டு விட்டு இதை தொடங்கவேண்டிய அவசியமில்லை. இது போன்ற பயிற்சிகளில் ஒருவர் காட்டும் ஆர்வமும் தொடர் முயற்சியும் குறுகிய காலத்தில் நல்ல பலனை தரும். அதன் பின்னர் மருந்து மாத்திரைகளை நிறுத்திக்கொள்ளலாம்.

 

எனினும் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக ஒரு தியான முறையை தேர்ந்தெடுக்கும் பொழுது சற்று கவனமாக நமக்கான சரியான பயிற்சியாக தேர்ந்தெடுத்தல் மிகவும் முக்கியம். ஏனெனில் சில தியான பயிற்சிகள் நேரடியாக மனதை மேலும் கொந்தளிப்பு மிக்க மனதாகவோ, பக்கவிளைவுகளை தரக்கூடியதாகவோ அமைந்து விடும். ஆகவே யோகமரபு  ஆசனம், பிராணாயாமம், பிரத்யாஹாரம், என முறையே உடல் , ஆற்றல் ,மனம் என்று ஒரு படிநிலையை பரிந்துரை செய்கிறது.

ஏனெனில் மனமே நமது துக்கத்திற்கு காரணமாகவும் , துக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான சாதனமாகவும் இருக்கிறது .

 

நீங்கள் தியானம் போன்ற ஒன்றை தேர்ந்தெடுக்கும் பொழுது இந்த படிநிலையை கவனத்தில் கொள்வது மேலும் பலனளிக்கும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Featured Post

Maleysia yoga retreat

 Malaysia yoga retreat https://www.jeyamohan.in/199529/